இருபதுக்கு இருபது கிரிக்கெட் வரலாற்றில் தோன்றிய சிறந்த வேகப் பந்துவீச்சாளராக இலங்கை வீரர் லசித் மாலிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரபல விஸ்டன் மாதாந்த கிரிக்கெட் சஞ்சிகையினால் குறித்த தெரிவு இடம்பெற்றுள்ளது. வரலாற்றில் தோன்றிய மிகச் சிறந்த இருபதுக்கு இருபது பந்துவீச்சாளரை தெரிவு செய்வதற்காக விஸ்டன் சஞ்சிகை அண்மையில் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றை நடத்தியிருந்தது. இதன்போது பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பின்னரே மாலிங்கவின் பெயர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணிக்காக 84 இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடியுள்ள மாலிங்க அதில் 107 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இருபதுக்கு இருபது சர்வதேச போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் லசித் மாலிங்க ஆவார். இருபதுக்கு இருபது போட்டியில் இரு முறை ஹட்ரிக் விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராகவும் அவர் சாதனை படைத்துள்ளார். லசித் மாலிங்கவுடன், தென்னாபிரிக்கா அணியின் டெல் ஸ்டைன், பாகிஸ்தான் அணியின் வஹாப் ரியாஸ், அவுஸ்திரேலியா அணியின் மிச்சல் ஸ்டார்க், பாகிஸ்தான் அணியின் மொஹமட் அமீர், மேற்கிந்திய தீவுகள் அணியின் டுவைன் பிராவோ, இந்திய அணியின் ஜஸ்பிரிட் பூம்ராஹ் ஆகிய வீரர்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.