கலைஞர்களை தேசிய பொருளாதாரத்தில் இணைத்து பாதுகாப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போதய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது பல்வேறு சந்தர்ப்பங்களில் கலைஞர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர். அதன் ஊடாக சிறந்த மட்டத்தில் கலைஞர்களுக்கு தங்களது தயாரிப்புக்கான ஒத்துழைப்புக்களை வழங்க முடிந்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கொவிட் 19 வைரஸ் காரணமாக இழந்த சந்தர்ப்பங்களை மீள உருவாக்குவதற்கான பின்புலத்தை ஏற்படுத்துவதே பிரதான நோக்கமாகுமென ஜனாதிபதி குறிப்பிட்டார். கலைஞர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கென நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இது தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டது. 9ம் தரத்தில் நிறுத்தப்படும் அழகியல் பாடம், சாதாரண தரம் வரை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய அவசியம் தொடர்பில் பேராசிரியர் முதலியான்சே திசாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார். குறித்த யோசனை தேசிய கல்விக் கொள்கைக்கான செயலணிக்கு சமர்ப்பிக்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். உள்நாட்டு, வெளிநாட்டு தயாரிப்பாளர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைத் தொகை கிடைக்கப்பெறாமைக்கான காரணங்கள் தொடர்பிலும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
சர்வதேச ரீதியில் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக தொகையை நாடு இழந்துள்ளது. இலத்திரனியல் ஊடகங்களின் ஊடாக ஒளிபரப்பப்படும் பாடல்களுக்கு உரிமைத் தொகை கிடைக்கப்பெறாமை தொடர்பில் கலைஞர்கள் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டனர். அது குறித்து அரச மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமென இதன்போது உறுதியளிக்கப்பட்டது. சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர், அமைச்சின் செயலாளர்கள், அதிகாரிகள், திரைப்பட இயக்குனர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் கலைத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.