சட்டரீதியான பரிந்துரைகளுக்கு அமைய ஈ.ரி.ஐ மற்றும் த பினான்ஸ் நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மத்திய வங்கிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி செயலகம் மத்திய வங்கி திறைச்சேரி மற்றும் வைப்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற குழுவின் ஊடாக எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பில் முன்மொழிவுகளை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக குறித்த இரு நிறுவனங்களிலும் 5 இலட்சத்திற்கும் குறைவான பணத்தை வைப்பிலிட்டுள்ளவர்களுக்கு அவற்றை வழங்கி முடிக்கவேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த இரு நிறுவனங்களினதும் சொத்துக்களை கையகப்படுத்தியாவது ஏனைய வைப்பாளர்களுக்கும் தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. நிதி நிறுவனங்களுக்கு கடன் தொகையை செலுத்தாது புறக்கணித்துவரும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். மக்களின் குற்றச்சாட்டுக்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் விசாரணை செய்து உயர்ந்தபட்ச தீர்வுகளை பெற்றுக்கொடுக்க அடுத்த நிதிச்சபை கூட்டத்தின் போது நடவடிக்கை எடுக்கப்படுமென மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டபிள்யு. டி.லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் குறைகளை திருத்திக் கொண்டு மக்களுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.