ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களிடமிருந்து மூன்று கோடி ரூபாவுக்கும் அதிக பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் நால்வரும், மற்றுமொரு நபரும் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருடன் தொடர்புகளை பேணியுள்ளதுடன், போதைப்பொருள் வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் நான்கு பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளினூடாக போதைப்பொருள் வர்த்தகத்திற்கு உதவியதன் மூலம், குறித்த நான்கு உத்தியோகத்தர்களும் பெருந்தொகையான பணத்தை ஈட்டியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.