தேசிய தன்மை மற்றும் கலாசார கட்டமைப்பை பாதுகாக்கக்கூடிய ஊடக பாவனை அவசியமென ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் உயர் அதிகாரிகளுடன் இடம்பெற்ற முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து தொலைக்காட்சித் துறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றம் அறிவுசார் நிகழ்ச்சிகளின் அவசியம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. அரசாங்கம் முன்னெடுத்துள்ள ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதன் முக்கியத்துவம் தொடர்பிலும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புக்காக தெரிவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய முறையான வேலைத்திட்டம் தொடர்பாகவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் தற்போதைய நிலை, எதிர்கால செயற்பாடுகள், திட்டங்கள் தொடர்பாகவும் மீளாய்வு செய்யப்பட்டது.
சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் தலைவர் சுதத் ரோஹண, நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஹசந்த ஹெட்டியாராச்சி, பிரதம நிறைவேற்று அதிகாரி நலின் குமார நிஷங்க உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்களும், சிரேஷ்ட அதிகாரிகளும் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் பங்கேற்றனர்.