வெளிநாடுகளில் பணிபுரிவதற்கென சென்றிருந்தவர்களில் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நாடு திரும்பியுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 21 நாடுகளிலிருந்து பணியாளர்கள் வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையத்திற்குள் பீ.சி.ஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் 50 பேரும், மாலைத்தீவில் தங்கியிருந்த 255 இலங்கையர்களும் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
எதிர்வரும் சில தினங்களில் சிஷல்ஸ், மடகஸ்கார், மொசம்பிக், உகண்டா, கென்யா, தன்ஷானியா, தென்கொரியா, பஹ்ரைன் , கட்டார், ஒமான், பங்களதேஸ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளிலிருந்து அதிகளாவானோர் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர். அவர்கள் நாட்டை வந்தடைந்ததும் உடனடியாக விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். அங்கு பெற்றுக்கொள்ளப்படும் முடிவுகளுக்கு அமைய தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அவர்களை அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கத்தால் வெளிநாடுகளில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைப்பு வாய்ப்பு பணியகத்தின் காப்புறுதி நிதியம் குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் வெளிநாட்டில் பணியாற்றிய 23 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.