கொவிட் – 19 தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ப்ரென்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டிகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 27ம் திகதி முதல், ஒக்டோபர் மாதம் 11ம் திகதி வரை பிரான்சின் பெரிஸ் நகரில் போட்டித்தொடர் இடம்பெறவுள்ளது. ரசிகர்கள் இன்றி போட்டிகளை நடத்தாது, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரசிகர்களின் பங்கேற்புடன் தொடரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் அனுமதிக்கப்படவுள்ள ரசிகர்களின் எண்ணிக்கை குறித்து இதுவரை தகவல் வெளியிடப்படவில்லை.
ப்ரென்ச் ஓப்பன் டென்னிஸ் தொடருக்கு முன்னதாக மெட்ரிட் ஓப்பன் மற்றும் இத்தாலி ஓப்பன் டென்னிஸ் போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கொவிட் – 19 வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. நூற்றாண்டு கால பழமை வாய்ந்த விம்பிள்ட்டன் டென்னிஸ் போட்டித்தொடர் முதன்முறையாக ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.