ஐரோப்பிய சங்கத்தின் கொழும்பிலுள்ள தூதுவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்பட்ட சவால்களை வெற்றிகொள்ள பொது சுகாதார சேவையாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐரோப்பிய சங்க தூதுவரிடம் சுட்டிக்காட்டினார். பொலிஸ் மற்றும் பாதுகாப்ப பிரிவினரின் ஒத்துழைப்புடன் பொது சுகாதார அதிகாரிகள் வைரஸ் தொற்றாளர்களை சரியான முறையில் இனங்கண்டனர். தொற்றாளர்களுடன் நெருங்கி பழகிய நபர்கள் அவர்கள் சென்ற இடங்கள் ஆகியவையும் அடையாளம் காணப்பட்டன. பெரும் எண்ணிக்கையிலானோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்மூலமே வைரஸ் தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடிந்ததாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதே நாட்டின் முன்னுள்ள மற்றைய சவாலாகும். தற்போதய பொருளாதார வளர்ச்சி வேகம் மிக குறைந்த மட்டத்தில் காணப்படுகிறது. இதனால் தேசிய கடன் பெறுமதி அதிகரித்துள்ளது. தேசிய கைத்தொழில் துறையை பலப்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். பல வகையான தானியங்கள் மற்றும் உணவு வகைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்யமுடியும். குறித்த துறையை நவீன மயப்படுத்துவதே இலங்கைக்குள்ள தேவையாகும். தற்போதய நிலையில் இலங்கையின் கடன் துண்டிக்கப்பட்டால், இலங்கைக்கு பெரும் நன்மை கிடைக்குமென ஜனாதிபதி தெரிவித்தார். தொடர்ந்தும் கடன் பெறுவது மாற்றீடாக அமையாது. முதலீடே அவசியமென ஜனாதிபதி ஐரோப்பிய சங்க பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். இதேவேளை ஜனாதிபதியின் கருத்துகளுக்கு ஐரோப்பிய சங்க தூதுவர்கள் சாதகமான பதிலை வழங்கியுள்ளனர். தமது நாடுகளின் ஊடாக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க கூடிய விதம் தொடர்பிலும் அவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.