திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் கீழ் காணப்படும் தொழிற்பயிற்சி மத்திய நிலையங்கள் அனைத்தும் எதிர்வரும் ஜீலை மாதம் 6ம் திகதி முதல் கட்டம் கட்டமாக திறக்கப்படவுள்ளன. கொரோனா வைரஸ் பரவலையடுத்து தொழிற்பயிற்சி மத்திய நிலையங்களை மூட நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும் தற்போது மக்களின் வாழ்வியலை வழமைக்கு கொண்டுவரும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கமைய அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மீளத்திறக்கப்படுகின்றன. தொழிற்பயிற்சி மத்திய நிலையங்கள் திறக்கப்பட்டாலும், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்பட்டுள்ள சகல ஆலோசனைகளும் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
50க்கும் மேற்பட்டோரை பயிற்சியில் இணைத்துக்கொள்ள நேரிட்டால், முறையாக கட்டம் கட்டமாக அவர்களை அழைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய நிலையங்களிலுள்ள உணவகங்கள் நடத்திச்செல்லப்படுமாயின் அதன் சுகாதார நிலை தொடர்பில் கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டும். சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் பிரதேச பொதுசுகாதார பரிசோதகர்களினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கமைய செயற்பட வேண்டியது அவசியமாகும்.
விடுதிகள் நடத்திச்செல்லப்படுமாயின் அவற்றையும் சுகாதார ஆலோசனைகளின்கீழ் முன்னெடுத்துச்செல்ல வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. துறைசார் அமைச்சர் தினேஸ் குணவர்தனவின் ஆலோசனைக்கமைய அமைச்சின் செயலாளர் டி . எம் சரத் அபேனுகுணவர்தனவினால் இது தொடர்பான தீர்மானம் பெறப்பட்டுள்ள நிலையில், தொழிற்பயிற்சி நிலையங்களை அடுத்தகட்டமாக திறப்பது தொடர்பான தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படுமென திறன் அபிவிருத்தி , வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.