கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக டுபாயில் சிக்கியிருந்த 290 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்களில் 120 கர்ப்பிணி தாய்மார்களும் அடங்குவதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். இன்று காலை 5.35 மணியளவில் டுபாயில் இருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் அவர்கள் கட்டுநாயக்க விமானம் நிலையம் வந்தடைந்ததாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
அவர்கள், விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெறும் வரை அவர்களை விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள விடுதிகளில்; தற்காலிகமாக தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மடகஸ்கார், உகண்டா மற்றும் இந்தியாவிலிருந்தும் மேலும் சிலர், அடுத்த வாரத்தில் நாடு திரும்பவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.