பஸ் மற்றும் ரயில் பயணிகளுக்கான உத்தேச பயண அட்டையை ஆகஸ்ட் மாதத்துக்கு முன்னர் அறிமுகப்படுத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளை பணித்துள்ளார். கொவிட் தொற்றுக்கு மத்தியில் பணபுலக்கத்தை குறைப்பதே இதன் நோக்கமாகும்.
பண பயன்பாட்டை இயன்ற அளவு குறைத்துக்கொள்ளுமாறு சுகாதார வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. போக்குவரத்து சேவைகளுக்காக முற்கொடுப்பனவு அட்டைகளை அறிமுகப்படுத்த நீண்டகாலமாக முயற்சித்த போதிலும் அது இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. அதனை அறிமுகப்படுத்த சிறந்த சந்தர்ப்பம் இதுவென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பான கூட்டம் ஒன்று போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றது. முற்கொடுப்பனவு அட்டைகள் அச்சிடப்படுவதன் மூலம் பணம் அச்சிடுவதற்கான செலவையும் குறைக்க முடியுமென தெரிவிக்கப்பட்டது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை போக்குவரத்து சபை, ரயில்வே திணைக்களம், அரச வங்கிகள், அரசாங்க தகவல் திணைக்களம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.