சுகாதார நடைமுறைகளுக்கு அமைய பொது தேர்தலை நடத்தும் நோக்கில் நாட்டின் 6 மாவட்டங்களில் இன்றைய தினம் மாதிரி வாக்கெடுப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன. யாழ்ப்பாணம், அம்பாறை, பதுளை, களுத்துறை, மட்டக்களப்பு மற்றும் நுவரேலியா ஆகிய மாவட்டங்களில் மாதிரி வாக்கெடுப்பு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் – நாவந்துறை ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் காலை 10 மணிக்கு ஆரம்பமான ஒத்திகை நடவடிக்கைகள் நண்பகல் 12 மணிக்கு நிறைவு செய்யப்பட்டன. அதன்போது சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய கிருமி தொற்றுநீக்கம் என்பன தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நாளைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்திலும் எதிர்வரும் 20ம் திகதி கொழும்பு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் மாதிரி வாக்கெடுப்பு நடவடிக்கைகள் இடம்பெறும்.