மதவழிபாட்டுத்தலங்களுக்கு செல்வதற்கும், மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அணில் ஜாசிங்க அனுமதி வழங்கியுள்ளார். அதற்கமைய மத வழிபாட்டு நடவடிக்கைகளுக்கென நாளைய தினம் முதல் ஆலயங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார பாதுகாப்பு நடைமுறைக்கமைய தனி நபர் இடைவெளியைப் பேணி மத வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியும். ஒரே சமயத்தில் அதிகபட்சம் 50 பேர் மத வழிபாடுகளில் பங்கேற்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேலதிக வகுப்புக்களை இம்மாதம் 29ம் திகதி முதல் மீள ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வகுப்புக்கள் நடத்தப்படும் இடங்களின் அளவுக்கு ஏற்ப சமூக இடைவெளியை பேணி வகுப்புக்களை நடத்தமுடியும். அதிகபட்சம் 100 மாணவர்கள் ஒன்று கூட வரையறுக்கப்பட்டுள்ளது. எனினும் 100 மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் வகுப்பறையின் பரப்பளவு காணப்படாவிடின் சாதாரணமாக குறித்த இடத்தில் 8 மாணவர்கள் மாத்திரம் ஒன்றுக்கூட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.