மத்திய மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கென வீடுகளை நிர்மாணித்துக்கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்திற்கு ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்தின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்வதற்கென நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன்போதே ஜனாதிபதி குறித்த ஆலோசனையை வழங்கியுள்ளார். பாரம்பரிய முறைமைகளிலிருந்து விலகி அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிலைக்கு மாற்றுவதற்கு தேவையான திட்டங்களை துரிதமாக தயாரிக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ இதன்போது குறிப்பிட்டார். கடந்த 5 வருடங்களின் இறுதியில் நிறுவனத்தை பொறுப்பேற்கும்போதும், தற்போதைய நிலை தொடர்பான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். அத்துடன் எதிர்கால இலக்குகளை இவ்வருடத்திலேயே திட்டமிடவேண்டுமெனவும் ஆலோசனை வழங்கப்பட்டது. அரச நிறுவனங்கள், தனியார் துறையின்; புதிய நிர்மாணத்துறை சந்தர்ப்பங்களை பெற்றுக்கொள்ளவேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது தெளிவுப்படுத்தப்பட்டது. தனியார்த்துறையினருடன் போட்டியிடக்கூடிய வகையிலான தரத்தையும், நியமங்களையும் மேம்படுத்திற்கொள்ளவேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அரச நிறுவனங்களிடமிருந்து கூட்டுத்தாபனத்திற்கு கிடைக்கவேண்டிய பணம் உரிய முறையில் கிடைக்காத காரணத்தினால் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன. அது தொடர்பில் கண்டறிந்து பணத்தை அறவிடுவதற்கு தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.