தயாரிக்கப்பட்டுவரும் தேசிய கல்விக்கொள்கை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார். நாட்டின் கல்வி செயற்பாடுகள் தொடர்பான ஜனாதிபதி செயற்பாட்டு படையணி, கல்விக்கொள்கை தயாரிப்பு பணிகளின் தற்போதைய நிலை தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியது. சுபீட்சத்தையின் தொலைநோக்கு எனும் கொள்கை பிரகடனத்திற்கு அமைய சகல பிள்ளைகளுக்கும் சமமான கல்வி வாய்புகள் எனும் தொனிப்பொருளில் புதிய கல்விக்கொள்கை தயாரிக்கப்படுகின்றது. ஆரம்ப பாடசாலையிலிருந்து, அறநெறிக்கல்வி, உயர்தர மற்றும் தொழிற்கல்வி வரை அனைத்தும் உள்ளடங்கும் வகையில் கல்விக் கொள்கையில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தேசிய கல்விக்கொள்கை தொடர்பான இறுதியறிக்கை தயாரிக்கப்படுவதற்கு முன்னர் குறைந்தபட்சம் 2 மாத காலம் அல்லது பரந்த சமூக கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்படவேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் ஊடாக அனைத்து பரிந்துரைகளும் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும். அதனூடாக கிடைக்கப்பெறும் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை உள்ளடக்கி இறுதியறிக்கையை தயாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கென பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டாலும் ஒன்லைன் கல்வி நடவடிக்கைகளை உயர்தரத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயற்பாட்டு படையணி, தெரிவித்துள்ளது. குறித்த நிலையை தொடர்ச்சியாக மேம்படுத்திச்செல்வதற்கான நிலை காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய ஒன்லைன் மூலமாக உயர்தரக்கல்வி நடவடிக்கைகளை விருத்திசெய்வதற்கான அவசியம் தொடர்பிலும் ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.