இந்தியாவின் புதுடில்லி நகரில் உள்ள வைத்தியசாலைகளில் வெளி நகரங்களை சேர்ந்த மக்களுக்கு தங்கியிருந்து சிகிச்சை பெற முடியாதென புதுடில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். புதிய நோயாளர்களை அனுமதிப்பதற்கு வைத்தியசாலைகள் மறுப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே புதுடில்லி அமைச்சர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கொவிட்19 தொற்றினால் புதுடில்லி நகரில் அதிகளாவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அங்கு 27 ஆயிரம் பேர் நோய் தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன் 761 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மொத்தமாக 2 இலட்சத்து 56 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். உலகில் கொவிட் 19 தொற்று அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா 5ம் இடத்தில் உள்ளது. இதேவேளை, இந்தியாவில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை தளர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இன்றைய தினம் முதல் சந்தை கட்டிட தொகுதிகள், உணவகங்கள், மதஸ்தலங்கள் மற்றும் அலுவலகங்கள் என்பன மக்கள் பயன்பாட்டுக்கென திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.