தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் கலாநிதி ரத்னஜீவன் ஹூலுக்கு எதிராக முறைப்பாடுதேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான கலாநிதி ரத்னஜீவன் ஹூல் வடக்கில் தெரிவித்த கருத்துக்கு எதிராக தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று பதியப்பட்டுள்ளது. எதிர்வரும் பொது தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு வாக்களிப்பதை தவிர்க்குமாறு அவர் வடக்கு மக்களிடம் தெரிவித்திருந்தார். இதற்கு எதிராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இன்று பிற்பகல் தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாட்டை முன்வைத்தார். இதனையடுத்து அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் ஒருவரான கலாநிதி ரத்னஜீவன் ஹூல் என்பவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தொடர்பில் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு தமிழ்மொழில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதன்போது அவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிக்கு வாக்களிக்களிக்க வேண்டாமென்ற எண்ணத்தில் கருத்தொன்றை தெரிவித்தார். அவரின் குறித்த செயல் கட்சியை அபகீர்த்திக்குள்ளாக்கும் வகையில் இருப்பதாக சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் சுயதீனமாக செயற்படும் நிறுவனங்களின் ஒன்றான தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு தமது தனிப்பட்ட கருத்தை மக்கள் மத்தியில் அழுத்தமாக தெரிவிப்பது சட்டத்திற்கு புறம்பானது. தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அதன் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் செயற்படுவது அவசியமாகும்.
இதன் காரணமாக ரத்னஜீவன் ஹூல் தெரிவித்த கருத்து கட்சிக்கு பங்கம் விளைவிப்பதாக அமைந்துள்ளதால் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், குறித்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் நிலைபாட்டை தெரிவிக்க வேண்டுமெனவும் எழுத்து மூலமான முறைபாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி சாகர காரியவசம் ஊடகங்களுக்கு தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினரான நலின் அபேசேகர, தேர்தல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க ஆகியோரிடம் குறித்த முறைபாடு ஒப்படைக்கப்பட்டதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.