பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைகளை புறக்கணித்து கடற்படை தளபதி எவன்காட் கப்பல் தொடர்பில் செயல்பட்ட விதம் அரச விரோத சூழ்ச்சி மற்றும் அரசாங்க ஆலோசனைகளுக்கு புறம்பாக செயல்படுவது, பாரதூரமான விடயம் என அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரித்து வரும் ஆணைக்குழுவில் இன்று சுட்டிக்காட்டப்பட்டது.
(கடற்படை அதிகாரிகள் 4 நாட்களுக்கு பொலிஸாருக்கு அறிவிக்காமல் கப்பலை தமது பொறுப்பில் எடுத்து செயல்பட்டிருப்பதாக ஆணைக்குழுவில் சாட்சியமளித்த எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி தெரிவித்துள்ளார். இக்கப்பலில் எவ்வித சட்ட விரோத பொருட்களும் கண்டு பிடிக்கப்படவில்லையென சாட்சி தெரிவித்தார். எவன்காட் கப்பலில் வைக்கப்பட்டிருந்த 717 ஆயுதங்களுக்கு ரக்னாலங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டிருந்ததாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. சாட்சிக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் வழக்கொன்றை தாக்கல் செய்வது பிரச்சினைக்குரிய விடயம் என சாட்சியின் சட்டத்தரணி தெரிவித்தார். எவன்காட் கப்பல் கைப்பற்றப்பட்டதன் பின்னர் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எவ்வாறான கருத்தை முன்வைத்தார் என ஆணைக்குழு கேட்டது, கப்பலில் இருந்த ஆயுதங்களின் இலக்கங்கள் அழிக்கப்பட்டிருந்தததாக ராஜித சேனாரத்ன பகிரங்கமாக தெரிவித்ததாகவும் அவ்வாறு இலக்கங்கள் அழிக்கப்படவில்லையென கடிதம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் சாட்சி சொன்னார். குறித்த கருத்தானது துவேச மனப்பாங்கில் சொல்லப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். அரச பகுப்பாய்வு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை போல் எந்தவொரு ஆயுதங்களிலும் இலக்கங்கள் மாற்றப்பட்டிருக்கவில்லையென சாட்சி தெரிவித்தார்.
எவன்காட் கப்பல் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக 7 ஆயிரத்து 500 குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டது. சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளின் இயலாமை அல்லது துவேச மனப்பான்மையிலும் கூடிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருப்பது இதன் மூலம் புலப்படுவதாக இவ்வாணைக்குழுவின் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் கடற்படை 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் 6 ஆம் திகதி கப்பலை ஏன் கைப்பற்றியது என ஆணைக்குழு கேள்வி எழுப்பியதுடன் அதற்கு நிஷங்க சேனாதிபதி கடற்படை தளபதி தன்னிச்சை போக்கில் கப்பலை கைப்பற்றியதாக தெரிவித்தார். அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி கப்பலின் செயல்பாடுகள் சட்டரீதியானதென குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்கு மூலம் அளிக்கப்பட்ட ஒரு பின்னணியில் கடற்படை தளபதியினால் இச்சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. )