கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 821 பேர் வைத்திய சிகிச்சைகளை பெற்றுவருகின்றனர். 811 பேர் முழுமையாக குணமடைந்து, வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். நேற்றைய தினம் நாட்டில் புதிதாக 10 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, கொரோனா தொற்றாளர்கள் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 643 ஆக அதிகரித்துள்ளது. குறித்த 10 பேரில், அறுவர் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருகைதந்தவர்கள். மேலும் கடற்படையைச் சேர்ந்த இருவரும், இராணுவ வீரர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் இருவரும் வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இராணுவ வீரரரின் குடும்ப உறுப்பினர்கள் இருவரும் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்தவர்களென இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
மே மாதம் 12ம் திகதியின் பின்னர் அவர்கள் சமூகத்துடன் எந்தவொரு தொடர்பையும் நேரடியாக பேணியிருக்கவில்லையெனவும், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். முப்படையினரால் நடத்திச்செல்லப்படும் 44 கண்காணிப்பு மையங்களில் தற்போது 4 ஆயிரத்து 988 பேர், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 11 ஆயிரத்து 608பேர், தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக பூர்த்திசெய்து, வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.