உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை குண்டுதாக்குதல் நடத்திய மொஹமட் நசார் தாக்குதல் நடைபெற இரண்டு தினங்களுக்கு முன்னர் அதாவது பெரிய வெள்ளியன்று அந்த தேவாலயத்துக்கு வருகை தந்திருந்ததாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
”மட்டக்களப்பு சியோன் தேவாலய அருட்தந்தை கணேசமூர்த்தி திருக்குமார் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார். அவர் தனது சாட்சியத்தில் உயிர்த்த ஞாயிறன்று காலை தேவாலயத்திற்கு இதற்கு முன்னர் வருகை தராத நபர் ஒருவரை தான் அவதானித்ததாக தெரிவித்தார். அவர் யார் என விசாரிப்பதற்காக அவர் அருகில் சென்று தான் வினவியதாக சொன்னார். குறித்த நபர் தன்னை உமர் என அறிமுகப்படுத்தியதாகவும் தேவாலயத்தை காண்பதற்காக வருகை தந்ததாகவும் தன்னிடம் தெரிவித்ததாக அருட்தந்தை கூறினார். தேவாலயத்துக்குள் வருகை தருமாறு அவரை தான் அழைத்ததாகவும் அதனை நிராகரித்து அவர் வெளியில் நின்றதாகவும் தெரிவித்த அருட்தந்தை, ஏன் இங்கு வந்தீர்கள் என தான் கேட்டபோது, தனது தாயாருக்கு சுகமில்லையெனவும் பிரார்த்தனை ஒன்றை நிறைவேற்ற வேண்டியிருப்பதாகவும் உமர் தெரிவித்துள்ளார். அவர் தனது தாயை ‘உம்மா’ என அழைத்தமையினால் அந்த நபர் முஸ்லிம் இனத்தவர் என தான் அறிந்து கொண்டதாகவும் அருட்தந்தை தெரிவித்தார். சியோன் தேவாலயத்தின் ஏதோவொரு பிரிவுக்கு செல்ல வேண்டியிருப்பதால் குறித்த நபர் தேவாலயத்தில் பணியாற்றிய மற்றொரு அருட்தந்தையான ஸ்டேன்லியிடம் அறிமுகப்படுத்தி தான் வெளியில் சென்றதாக அருட்தந்தை திருக்குமார் கூறினார். இத்தேவாலயத்தில் பணியாற்றிய யோகநாதன் என்பவர் இதற்கு முன்னரும் உமர் என்பவர் தேவாலயத்திற்கு வருகை தந்ததாக தெரிவித்துள்ளார். புகைப்படம் ஒன்றை காண்பித்து அதில் உள்ள நபரை தெரியுமா என ஆணைக்குழு கேட்டது. அந்த உருவம் தனது வாழ்நாளில் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு உருவம் என தெரிவித்த அருட்தந்தை, அதில் இருப்பது உமர் தான் என தெரிவித்தார். அருட்தந்தை நாகய்யா ஸ்டேன்லியும் ஆணைக்குழுவில் சாட்சியமளித்ததுடன், தேவாலயத்திற்குள் சென்று அமருமாறு உமரிடம் சொன்ன போதும் அவர் அதனை நிராகரித்ததாக கூறினார். காலை 9 மணியளவில் தேவாரதனை ஆரம்பிக்கப்பட்டவுடன் உமர் எனப்படும் நபர் முன்னர் காணப்பட்ட இடத்தில் இருக்கவில்லையென்பதை தான் அறிந்துக்கொண்டதாக அருட்தந்தை ஸ்டேன்லி சொன்னார். அதற்கு பின்னர் குண்டு சத்தத்தை தான் கேட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ”