கொவிட் – 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 15 கடற்படை வீரர்கள், சிகிச்சையின் பின்னர் பூரண குணமடைந்து நேற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது.
குறித்த 15 கடற்படை வீரர்களில் கடற்படை வீரர்களின் 8 வீரர்கள் ஐ.டி.எச் வைத்தியசாலையிலும், 4 வீரர்கள் ஹோமாகம வைத்தியசாலையிலும், 2 வீரர்கள் முல்லேரியாவ வைத்தியசாலையிலும், ஒருவர் கடற்படை பொது வைத்தியசாலையிலும், சிகிச்சை பெற்று வந்தவர்களே இவ்வாறு குணமடைந்துள்ளனர்.
இவர்களுக்கு வைத்தியசாலைகளில் சிகிச்சையின்போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் மூலம் குறித்த வைரஸ் அவர்களது உடம்பில் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் நேற்று வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இக்கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறிய போதிலும், சுகாதார ஆலோசனைக்கு அமைய மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கமைய, இவ்வாறு குணமடைந்த 15 கடற்படை வீரர்கள் உட்பட 403 கடற்படை வீரர்கள் கொவிட் – 19 தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.