தேர்தல் ஒன்றை நடத்த வேண்டுமென வலியுறுத்துவதே எதிர்கட்சியின் கடமையென்ற போதும் தற்போதைய எதிர்கட்சி தேர்தலை ஒத்திவைக்க முற்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இன்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வழிபாடுகளின் பின்னர் பிரதமர் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து ஆசிர்வாதம் பெற்று கொண்டார்.
”கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று மு.ப வருகை தந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து அவர் மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்று கொண்டார்.”
(தேர்தல் ஒன்று கட்டாயம் நடைபெற வேண்டும். அதற்கு தேர்தல் ஆணையாளர் தயாராக வேண்டும். அது அவரின் கடமை மற்றும் பொறுப்பாகும். தேர்தலை நடத்தவே ஆணைக்குழு உள்ளது. அதற்கான தயாரிப்பு பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கு தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும். தேர்தலை துரிதமாக நடத்த வேண்டுமென்று கோறுவதே எதிர்கட்சியின் கடமையாகும். அரசாங்கம் தான் தேர்தலை தாமதிக்க பாடுப்படும். ஆனால் இங்கு தலைகீழாக நடக்கின்றது. தேர்தல் வேண்டுமென அரசாங்கம் சொல்கின்றது. வேண்டாம் என எதிர்கட்சி சொல்கின்றது. இதற்கு என்ன காரணம் என மக்கள் அறிவார்கள்.)”
அத்துடன் இன்றைய தினம் தேரரின் 70வது பிறந்த தினமாகும். தேரர் தீர்காயுசுடன் வாழ வேண்டுமென பிரதமர் பிரார்த்தித்தார். தொடர்ந்து அஸ்கிரிய மகா விஹாரைக்கு விஜயம் செய்த பிரதமர் மகாநாயக்கர் சங்கைக்குரிய வராக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்று கொண்டார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் வாழ்க்கைக்கு ஐம்பது வருடங்கள் பூர்த்தியாவதையொட்டி விசேட பிரித் நிகழ்வு இடம்பெற்றது.