பெலரூஸ் நாட்டில் இருந்து 277 இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். பெலரூஸ் மின்ஸ்க் நகர் விமான நிலையத்தில் இருந்து வந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 1206 ரக விசேட விமானத்தில் குறித்த இலங்கை பயணிகள் நேற்று இரவு 11.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். குறித்த விமானத்தில் வருகை தந்த அநேகமானோர் அந்நாட்டில் உயர் கல்வியினை கற்பதற்காக சென்றிருந்த மாணவர்களாகும்.
அவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்ததன் பின்னர், இலங்கை விமானப் படையினரால் கிருமி தொற்று நீக்கும் செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டனர். அதனையடுத்து, அவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளதாக என பரிசோதிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து குறித்த இலங்கையர்கள் அனைவரும் இலங்கை இராணவத்தினரால் விசேட பஸ் மூலம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதேவேளை, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இருந்து மேலும் சில இலங்கையர்கள் தாயகம் திரும்பவுள்ளதாக விமானநிலைய உப தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.