வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களில் 41 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நாட்டிற்கு வருகை தருவதற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களை அழைத்து வருவதற்கென முறையான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதற்கென அமைக்கப்படும் குழுவினர் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் ஒன்றுகூடவுள்ளனர்.
நாட்டிற்கு வருகை தரும் தரப்பினர் குறித்து குழுவினர் ஆராயவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக பல நாடுகளின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன.
இதனால் வீசா காலம் நிறைவடைந்து, நாட்டிற்கு வருகை தரமுடியாத இலங்கையர்கள் 41 ஆயிரத்திற்கும் அதிகமானோர், அவர்களை அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அங்குள்ள தூதரக அலுவலகங்களுக்கு சென்று நாட்டிற்கு வருவதற்கென தம்மை பதிவு செய்துகொள்ளுமாறு அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அவ்வாறு பதிவு செய்பவர்களில் முதற்கட்டாக நாட்டிற்கு அழைத்து வருபவர்கள் குறித்து அதற்கென நியமிக்கப்பட்ட குழு தீர்மானங்களை எடுக்குமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரஷ்யாவிலிருந்து 181 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். யு.எல். 1206 இலக்கமுடைய விசேட விமானம் மூலம் இன்று காலை 5.50 அவர்கள் நாட்டை வந்தடைந்ததாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார். நாடு திரும்பிய அனைவரையும் தொற்று நீக்கல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் 261 பேர் அடங்கிய முதலாவது குழு ரஷ்யாவிலிருந்து கடந்த 22 ம் திகதி அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.