கொழும்பு – மாளிகாவத்தையில் தனியார் ஒருவர் நிதி உதவி வழங்கியபோது இடம்பெற்ற அசம்பாவிதத்தை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸில் இருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கு பல்வேறுபட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில், நாட்டின் சுகாதார பிரிவினர் மற்றும் பாதுகாப்பு பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை பின்பற்றாமல் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தை கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை குறிப்பிட்டுள்ளது.
நிவாரண உதவிகளை முறையாக உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய சட்டங்களை பின்பற்றி முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நெருக்கடியின் போது ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. எனினும் உதவிகளை வழங்கும்போது நாட்டின் சட்டம் மற்றும் சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்றி நடக்க வேண்டும் என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.