தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட யுவதியொருவரை காப்பாற்றச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கியதாக தலவாக்கலை பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த தமிழ் யுவதியை ஆப்தின் றிஸ்வான் எனும் இரு பிள்ளைகளின் தந்தை காப்பாற்றச் சென்ற போதே இவ்வாறு நீரில் மூழ்கினார். தலவாக்கலை ரயில்வே பாலத்தில் குறித்த யுவதி நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளார். இதனை அவதானித்த 32 வயதான ஆப்தின் றிஸ்வான் நீரில் குதித்து குறித்த யுவதியை நீருக்கு அடியில் இருந்து மேலே இழுத்த நிலையில் அவர் நீருக்குள் மூழ்கியுள்ளார். இதனை எதேர்ச்சியாக அவதானித்த பொலிஸ் அதிகாரியொருவர் பாதுகாப்பு அங்கியை அணிந்து கொண்டு நீர்த்தேக்கத்தில் குதித்து யுவதியை காப்பாற்றியுள்ளார். ஆனால் றிஸ்வானை அவரினால் காப்பாற்ற முடியவில்லை. சுமார் 200 பேருக்கும் அதிகமானோர் பார்த்துக் கொண்டிருக்க குறித்த இளைஞர் துணிச்சலாக பாய்ந்து அப்பெண்னை காப்பாற்ற முயன்ற போதும், அவர் நீரில் மூழ்கி மாயமானார். நீரில் மூழ்கிய இளைஞனை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.