மாளிகாவத்தை ஜூம்மா மஸ்ஜித் பள்ளிவாசலுக்கு அருகில் ஏற்பட்ட நெரிசலில் 3 பெண்கள் உயிரிழந்ததுடன், எண்மர் காயமடைந்தனர். இவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
இப்பள்ளிவாசலின் அருகில் உள்ள வீடு ஒன்றில் பணம் பங்கிடும் போது நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாளிகாவத்தை ஜூம்மா மஸ்ஸித் பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் தெஹிவளை பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு கொடுப்பனவை வழங்கியுள்ளார்.
ஒருவருக்கு தலா ஐயாயிரம் ரூபா வழங்கப்பட்டதுடன், 300கும் மேற்பட்டோர் அங்கு கூடியுள்ளனர். இவ்வாறு பெருந்தொகையான மக்களுக்கு கொடுப்பனவு வழங்கும் அளவுக்கு இங்கு வசதியில்லையென பொலிசார் தெரிவிக்கின்றனர். அத்துடன் இவ்வாறு கொடுப்பனவு வழங்க போவதாக பொலிசாருக்கோ அல்லது வேறு எந்த தரப்பினருக்கோ அறிவிக்கப்படவில்லை. ஒரே நேரத்தில் ஏராளமானோர் வீட்டுக்குள் நுழைய முற்பட்ட போதே நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த 3 பெண்களுமே 65கும் மேற்பட்ட மூதாட்டிகள் என பொலிசார் தெரிவித்தனர். சம்பவத்தின் பின்னர் ஜூம்மா மஸ்ஜித் வீதியில் கொழும்பிற்குள் பிரவேசிப்பதற்கும் வெளிச்செல்வதற்கும் தற்காலிக தடை ஏற்பட்டது.
இச்சம்பவத்தை தொடர்ந்து குறித்த வர்த்தகர் உள்ளிட்ட ஆறு பேர் மாளிகாவத்தை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென மேல் மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.