இத்தாலியில் அமுலில் உள்ள பயணிகள் போக்குவரத்து சேவை இடைநிறுத்தலை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 3ம் திகதியிலிருந்து பயண ரத்து நீக்கப்படுமென இத்தாலி அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை அரசாங்கம் பிறப்பித்துள்ளதாக இத்தாலி தகவல்கள் தெரிவிக்கின்றன. கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக இத்தாலியில் பயண ரத்து அமுல்படுத்தப்பட்டிருந்தது. இதற்கமைய, சர்வதேச விமானங்கள் இத்தாலிக்கு வருவதற்கு தடைவிதிக்கப்பட்டது. உள்நாட்டிலும் பிராந்தியங்களுக்கிடையிலான போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக கடைப்பிடிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சில இத்தாலியில் தளர்த்தப்பட்டுள்ளன. வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும். இதேவேளை, கொவிட் 19 வைரஸ் தாக்கம் காரணமாக, அதிகளவான உயிரிழப்புக்கள் பதிவான நாடுகளில் இத்தாலி முன்னிலையில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை 31 ஆயிரத்து 600 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவை அடுத்து அதிக மரணங்கள் பதிவான 3வது நாடாக இத்தாலி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.