முஹூது மகா விகாரை என அழைக்கப்படும் வரலாற்று புகழ் பெற்ற கடல் விகாரையின் பாதுகாப்பு கருதி கடற்படை உப குழுவொன்று ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் பாதுகாப்பு பிரதாணிகள் இப்பகுதிக்கு மேற்கொண்ட விஜயத்தை தொடர்ந்து இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுமார் 2 ஆயிரம் வருட கால வரலாற்றை கொண்ட இவ்விகாரை பௌத்த மக்களின் முக்கிய வணக்கஸ்தலமாக திகழ்ந்து வருகின்றது. பல்வேறு பழம்பெருமை வாய்ந்த இவ்விகாரை வளாகத்தில் ஏராளமான தொல்பொருள் சின்னங்கள் காணப்படுகின்றன. ஆகவே இது சமய ரீதியிலும் வரலாற்று ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1951 ஆம் ஆண்டு அப்போதைய தொல்பொருள் ஆணையாளராக கடமையாற்றிய செனரத் பரனவிதாரன இவ்விவகரைக்கு 72 ஏக்கர் காணி சொந்தமானதென வர்த்தமானி மூலம் அறிவித்தார். இது 1965 ஆம் ஆண்டு 32 ஏக்கராக குறைக்கப்பட்டதாக விகாராதிபதி சங்கைக்குரிய வரகாபொல இந்திரதிஸ்ஸ தேரர் தெரிவிக்கின்றார். ஏராளமானோர் இவ்விகாரைக்கு அருகில் மணல் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக கடந்தகாலங்களில் ஆதாரத்துடன் ஊடகங்கள் நிருபித்தன. ஒரு சிலர் இவ்விகாரை வளாகத்தில் அத்துமீறி வீடுகளை அமைத்திருப்பதாக சுட்டிக்காட்டிய போதும் அரசாங்க அதிகாரிகள் எவரும் இவ்விடயத்தில் அவதானம் செலுத்தவில்லை.
அப்போதைய கலாசார அமைச்சர் கூட இவ்விடயத்தை அலட்சியப்படுத்தியதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. சட்டம் அனைவருக்கும் சமம் என தற்போதைய அரசாங்கம் நடைமுறை ரீதியில் நிருபித்து புராதன சின்னங்கள் அழிவடைவதை தடுத்துள்ளது. இதன் பிரகாரம் இவ்விகாரையின் பாதுகாப்பு கருதி கடற்படை உப குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர், இராணுவ தளபதி, கடற்படை தளபதி, பதில் பொலிஸ்மா அதிபர் , கிழக்கு மாகாண ஆளுநர், ஆகியோர் இவ்விகாரைக்கான கண்காணிப்பு விஜயத்தில் இணைந்து கொண்டனர்.