கொவிட் 19 வைரஸை ஒழிக்கும் செயற்றிட்டத்துக்கு பயன்படுத்துவதற்காக பாதுகாப்பு ஆடைகள் மற்றும் நிதியுதவி என்பன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டது.
தேசிய வருமான விலை மதிப்பீட்டு அதிகாரிகள் சங்கம் கொவிட் 19 ஒழிப்பு செயற்றிட்டத்துக்கு பத்து இலட்சம் ரூபா பெறுமதியான 4000 பாதுகாப்பு அங்கிகளை பிரதமரிடம் ஒப்படைத்தது. இச்சங்கத்தின் தலைவர் சேனக்க சமரசிங்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வின் போது இணைந்திருந்தனர். இச்சந்தர்ப்பத்தில் ஐடிஎச் தொற்று நோயியல் வைத்தியசாலையை தொடர்பு கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, குறித்த ஆடையணிகளை அவ்வைத்தியசாலைக்கு வழங்க நடவடிக்கை எடுத்தார்.
இதேவேளை இலங்கை பொதுஜன பொறியியலாளர் முன்னணியில் அங்கம் வகிக்கும் பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் பதவி வகிக்கும் பொறியியலாளர்களினால் கொவிட் 19 சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு வைப்புச் செய்வதற்காக பத்து இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கப்பட்டது. இலங்கை மின்சார சபையின் தலைவர் வஜித்த ஹேரத், நகர அதிகார அமைச்சின் நகர செயலாளர் ரஞ்சித் திசாநாயக்க, மினிக்கோ நிறுவனத்தின் தலைவர் பாக்ய ஜயதிலக்க ஆகியோர் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர். மொரட்டுவை புனித செபஸ்டியன் பாடசாலையின் மாணவரான டெவின் பெர்ணான்டோ மக்களுக்கு மருந்து விநியோகம் மற்றும் அவர்களுக்கான தெளிவுப்படுத்தல் மற்றும் உஷ்னத்தை அளக்கும் பணிகளுக்காக பயன்படுத்தும் ட்ரோன் கருவியொன்றை உருவாக்கியுள்ளார். அதனையும் அவர் இன்றைய தினம் பிரதமரிடம் ஒப்படைத்தார்.