வெளிநாட்டு கடன் பெறாமல் முதலீடுகளினால் மாத்திரம் புதிய அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ தெரிவிததுள்ளார். அனைத்து திட்டங்களும் தேசிய கொள்கைக்கு ஏற்புடையதாக காணப்படவேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொழும்பு நகரம் உள்ளிட்ட நாட்டின் பிரதான நகரங்கள் பலவற்றை மையப்படுத்தி , துரிம அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அமைச்சுக்களின் செயலாளர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான நிறுவனங்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை, முதலீட்டுச் சபை மற்றும் துறைமுக அதிகார சபையின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
மக்களின் வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டு வந்து, பொருளாதார செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை விரைவுபடுத்த வேண்டுமமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு முனையங்களின் அபிவிருத்தியை விரைவாக ஆரம்பிப்பது தொடர்பிலும் கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை அபிவிருத்தி திட்டங்களுக்கென காணிகளை தெரிவுசெய்து கையகப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறைந்த, மத்திய மற்றும் உயர் வருமானம் பெறுவோருக்கென வீடுகளை நிர்மாணிக்கும் பணியும் ஆரம்பிக்கப்படவுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வருவோரை இலக்காகக் கொண்டு அனைத்து வசதிகளையும் கொண்ட வீடுகளை நிர்மாணித்து, வாடகை அடிப்படையில் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.