மதிப்பு சேர் பெறுமதி வரியை மூன்று மடங்காக அதிகரிப்பதற்கு சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது. கொவிட் 19 வைரஸ் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்ப்பட்டுள்ள நெருக்கடிகளை நீக்கும் வகையில் சவுதி அரேபியா சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு கட்டமாகவே மதிப்பு சேர் பெறுமதி வரியை அதிகரிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை இடைநிறுத்துவதற்கும் சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது. கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் சவுதி அரேபிய அரசாங்கம் வெட் வரி முறையை அறிமுகம் செய்தது.
இந்நிலையில் தற்போது அமுலில் உள்ள 5 வீத வெட் வரியை 15 வீதமாக அந்நாட்டு அரசாங்கம் அதிகரித்துள்ளது. அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் வரி அதிகரிப்பு அமுலுக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. அரச நிதியின் இருப்பை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும். இதேவேளை கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் உலகளாவிய ரீதியில் எரிபொருட்களின் விலை வீழ்ச்சி கண்டுள்ளது. எண்ணெய் வர்த்தகத்தை முக்கிய பொருளாதார வளமாக கொண்டுள்ள சவுதி அரேபியாவும் நெருக்கடிகளை சந்தித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.