தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில், வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இச்சந்திப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரேரணைகள் அடங்கிய மகஜர் ஒன்றை பிரதமரிடம் கையளித்தனர். வட மாகாணத்தில் விவசாய நடவடிக்கைகளுக்காக காணிகளை விடுவிப்பது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ததேகூட்டமைப்பினர் பிரதமரிடம் இச்சந்திப்பின் போது வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தனர்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோருக்கு உரிய விலையென்றை பெற்று கொள்வதற்கான திட்டங்களை வகுக்குமாறும் அவர்கள் பிரதமரிடம் தெரிவித்தனர். மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இச்சந்திப்பின் போது எடுத்துரைத்தனர். வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ததேகூ பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்ததுடன், எல்.ரீ.ரீ.ஈ கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு இச்சந்திப்பின் போது பிரதமரிடம் கேட்டுக் கொண்டனர். அரசியல் யாப்பு திருத்தம் மற்றும் கொவிட் 19 தொடர்பில் கிடைக்கும் நிதியை வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கும் பெற்று தருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இச்சந்திப்பில் முன்னாள் அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், பெசில் ராஜபக்ஷ, ததேகூ சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவஞானம் ஸ்ரீதரன், யோகேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.