உலகை அச்சுறுத்தியுள்ள கொரோனா வைரஸ் இயற்கையாக தோற்றம்பெற்றதென உலக சுகாதார ஸ்தாபனம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சீனாவிலுள்ள ஆய்வுகூடமொன்றில் செயற்கையாக உருப்பெற்றதே இந்த கொரோனா வைரஸ் என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. இதற்கான ஆதாரங்களும் தம்மிடமுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். வைரஸ் பரவியதாக கருதப்படும் சீனாவின் வுஹான் நகரிலுள்ள ஆய்வுகூடமொன்றில் வைரஸ் தோற்றம்பெற்றமைக்கான ஆதாரங்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஆதாரங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி மறுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் இயற்கையாகவே தோற்றம்பெற்றதெனவும் விலங்குகளிடமிருந்து மனிதனுக்குள் இந்த வைரஸ் பரவியுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளது. இதனை நிரூபிப்பதற்கான விசாரணைகளும் சீன அதிகாரிகளின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.