இந்தியாவில் கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. ஆசியாவில் சீனாவுக்கு அடுத்தபடியாக, தொற்றாளர்கள் அதிகம் அடையாளம் காணப்பட்ட நாடாக இந்தியா பதிவாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசினால் இதுவரை 934 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 6 வாரங்களுக்கு மேலாக இந்தியாவில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது. இவ்வார இறுதியுடன் ஊரடங்குச் சட்டம் அமுல் காலம் நிறைவுக்கு வரவுள்ளது. எனினும் நோய்த்தொற்றாளர்கள் அதிகம் பதிவாகுவதால், இந்திய மத்திய அரசு, ஊரடங்குச் சட்டத்தை நீடிக்குமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொவிட் 19 தொற்று பாதிப்பு குறைவான பகுதிகளிலுள்ள தொழிற்ச்சாலைகள், நிறுவனங்களின் செயற்பாடுகளை பகுதியளவில் ஆரம்பிப்பதற்கு இந்திய பிரதமர் நரேந்த்ர மோதி அனுமதி வழங்கியுள்ளார். இந்தியா முழுவதும் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக அந்நாட்டில் மில்லியன் கணக்கானோர், பொருளாதார சிக்கல்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். உணவு தட்டுப்பாடு, வேலையிழப்பு போன்ற பிரச்சினைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை கொவிட் 19 வைரஸ் தடுப்பூசியை உருவாக்கும் பணியிலும் இந்தியா ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.