க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை இன்று முதல் ஒன்லைன் மூலம் பெற்று கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையை கருத்திற்கொண்டு சுகாதார மற்றும் தேசிய வைத்திய சேவைகள் அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் இம்முறை பெறுபேறுகள் பாடசாலைகளுக்கு ஒன்லைன் மூலம் பெற்று கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து மாகாண மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு இது தொடர்பான விளக்கங்கள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கும் ஆரம்ப நிகழ்வு அமைச்சர் டளஸ் அழகப்பெரும தலைமையில் பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்றது.
தற்போதைய சூழ்நிலையில் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு பெறுபேறுகளை மாணவர்களுக்கு வழங்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இத்திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் அதற்கு தலைமை வழங்கிய பரீட்சை ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் அமைச்சர் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.