கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 588 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார பிரிவு உறுதிசெய்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 65 பேர் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 126 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர். 455 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது. வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 295 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கடற்படை வீரர்களுக்கு வெற்றிகரமாக சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார். கடற்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன் தொடர்பிலும் கவனம ;செலுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வெலிசறை கடற்படை முகாமில் தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடற்படை வைத்தியசாலை சுத்திகரிக்கப்பட்டு வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட கடற்படைக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆராக்கிய நிலையில் உள்ள வீரர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முகாமில் கட்டம் கட்டமாக கிருமி தொற்று நீக்கப்பட்டு குறித்த பகுதிகளை மீள பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை, வெலிசறை கடற்படை முகாம் வீரர்களுடன் நெருங்கி செயற்பட்ட கட்டுநாயக்க விமானபடை இசைக்குழுவைச் சேர்ந்த வீரரொருவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விமான படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த நபருடன் நெருங்கி செயற்பட்ட 60 பேர் இனங்காணப்பட்டு அவர்கள் PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த பரிசோதனை முடிவுகள் இன்று கிடைக்கப்பெறுமென விமானபடை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.