கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக சீன அரசாங்கம் இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்புகளை வழங்கிவருகின்றது. 211 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் மற்றும் சுகாதார பாதுகாப்பு உபகரணங்களை சீன அரசாங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சீன பதில் தூதுவர் குறித்த உபகரணங்களை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கையளித்தார். 20 ஆயிரம் PCR பரிசோதனை உபகரணங்கள், ஒரு இலட்சம் முககவசங்கள், 5 ஆயிரம் கையுறைகள் உள்ளிட்ட உபகரணங்கள் சீனாவினால் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொடர்பில் சீன அரசாங்கம் மேற்கொண்ட வேலைத்திட்டம் தொடர்பான அறிக்கையும் சீன பதில் தூதுவரால் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியிடம் கையளிக்கப்பட்டது. எதிர்வரும் இரு வாரங்களில் மீண்டும் சீன அரசாங்கம் இலங்கைக்கு நன்கொடைகளை வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இதேவேளை பட்டா நிறுவனம் சத்திர சிகிச்சைகளுக்கு உபயோகிக்கப்படும் ஆயிரம் பாதணிகளை நேற்றைய தினம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கையளித்துள்ளது.