பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கென ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ ஜனாதிபதி செயலணியை ஸ்தாபித்துள்ளார். அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரிமையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய செயலணி உறுவாக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் பரவியுள்ள கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார, சமூக சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்தி பொருளாதார புத்தெழுச்சியை திட்டமிடுதல் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய பொறுப்புகள் இச்செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளன.
தேசிய கைத்தொழிலாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து, மக்கள் மைய பொருளாதாரமொன்றை தாபிப்பதற்கென, இணைந்த செயற்பாடுகளை மேற்கொள்வதே செயலணியின் நோக்கமாகும். ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கொள்கைகளை அடிப்படையாக கொண்டு புதிய வாயில்களின் ஊடாக நாட்டுக்கே தனித்துவமான பொருளாதார சட்டகமொன்றை அமைப்பதன் மூலம் உற்பத்திப் பொருளாதாரமொன்றை கட்டியெழுப்புவதற்காக குறித்த நிறுவனங்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல் செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பொறுப்பாகும்.
மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலையில் பேணுவதற்காக சுகாதார, கல்வி செயலணிகளின் நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து உற்பத்திகளை விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இச்செயலணியின் பணியாகும்.
எவரேனும் ஒரு அரச ஊழியர் அல்லது ஒரு அமைச்சு, அரச திணைக்களம், அரச கூட்டுத்தாபனம் அல்லது வேறு அதுபோன்றதொரு நிறுவனம் இச்செயலணியினால் வழங்கப்படும் கடமை அல்லது பொறுப்பினை நிறைவேற்றத் தவறுதல் அல்லது காலம்தாழ்த்துதல் அல்லது அதுபோன்ற அனைத்து சந்தர்ப்பங்கள் குறித்தும் ஜனாதிபதி அவர்களுக்கு அறிக்கையிடுமாறும் செயலணிக்கு பணிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கான செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் , வர்த்தமாணி மூலம் அறிவிக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி பசில் ராஜபக்ஷ அவர்கள் செயலணியின் தலைமைப் பொறுப்பை வகிக்கின்றார். பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர்களான என்டன் பெரேரா மற்றும் டீ.எஸ்.ஜயவீர ஆகியோர் செயலணியின் இணை செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.