கொரோனா வைரஸ் தொற்றால் வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை மீள நாட்டுக்கு அழைத்துவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய இந்தியாவின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்கள் 102 பேர், இன்று நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளனர். மாலை 04.55 மணிக்கு விமானம் இந்தியாவிலிருந்து வருகைதரவுள்ளதாக விமான நிலைய உபதலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்தார். இன்று அழைத்துவரப்படும் 102 மாணவர்களும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். அத்துடன் நாளைய தினம் நண்பகல் 12.15 மணிக்கு மேலும் 117 பேர், இந்தியாவின் கோயப்புத்தூரிலிருந்து நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளனர். நாளை மாலை 4.45 மணிக்கு நேபாளம் காத்மண்டு நகரிலிருந்து மேலும் 93 பேர், இலங்கைக்கு வருகைதரவுள்ளனர். 25 ம் திகதி 12.55 மணிக்கு மேலும் 161 பேர், இந்தியாவின் பெங்களுரிலிருந்து நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளதாக விமான நிலைய உபதலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்தார்.
இதேவேளை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதரும் பயணிகளும், விமான நிலையத்தில் தரித்து நிற்பதற்காக வழங்கப்பட்ட காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதுவரை வழங்கப்பட்ட 6 மணித்தியால கால அவகாசம், 12 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.