கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதால், இதுவரை செலுத்தாத போக்குவரத்து விதிமீறல் தொடர்பான தண்டப்பணத்தை செலுத்த அரசாங்கம் சலுகை காலத்தை அறிவித்துள்ளது. பொலிஸ் மா அதிபரின் இணக்கப்பாட்டின் கீழ், எதிர்வரும் மே மாதம் 2 திகதி வரை இந்த சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. மார்ச் முதலாம் அல்லது அதற்குப் பின்னர் வழங்கப்படும் அபராத தொகையை எந்தவொரு தபால் அல்லது உப தபால் நிலையங்களில் செலுத்த முடியும்.
பொலிஸாரினால் மார்ச் மாதம் 1ஆம் திகதி அல்லது அதன் பின்னர் வழங்கப்பட்டுள்ள காலத்தில் விதிக்கப்படும் தண்டப்பணத்தை எந்தவித மேலதிக தண்டப்பண அறவீடும் இன்றி மே மாதம் 2 ஆம் திகதி வரை செலுத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பெப்ரவரி 16 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 29 ஆம் திகதி வரையில், விதிக்கப்பட்ட தண்டப்பணச் சீட்டானது, உரிய மேலதிக அபராதத்துடன் செலுத்த மே 2 ஆம் திகதி வரை செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே 2ஆம் திகதி வரை மட்டுமே சலுகை வழங்கப்படுவதால், அக்காலப் பகுதிக்குள் சகல தண்டப்பணங்களையும் செலுத்துமாறு தபால் திணைக்களம் பொதுமக்களை கேட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதன் காரணமாக குறித்த சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.