கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு இம்மாதம் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையுடன் ஒரு வருடம் பூர்த்தியாகிறது. குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக அன்றைய தினம் காலை 8.45 மணிக்கு வீடுகளில் இருந்தவாறு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார். அன்றைய தினம் முன்னெடுப்பதற்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவுத் திருப்பலிகள் மற்றும் விசேட வேலைத்திட்டங்கள் ஆகியன ஏற்கனவே திட்டமிப்பட்டப்படி நடத்தப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கு அரசாங்கம், வைத்தியர்கள், தாதியர்கள், பொலிஸார், முப்படையினர் மற்றும் சுகாதார அதிகாரிகள் என பலத்தரப்பினரும் தன்னலம் பாராது சேவையாற்றி வருகின்றனர். இவர்களின் சேவைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் திருப்பலிகள் உள்ளிட்ட வேலைத்திட்டங்களை நடத்தாமலிருக்க தீர்மானித்ததாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் தெரிவித்துள்ளார்.