கொரோனா வைரஸ் நாட்டிற்குள் பரவுவதை தடுப்பதற்கென அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களை சக்திப்படுத்தும் வகையில் இன்றுமுதல் ஏப்ரல் 3 ம் திகதி வரை வீட்டிலிருந்து பணிபுரிவதற்கான காலமாக அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளைத் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச , அரை அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இதன் கீழ் செயற்படவேண்டுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
குறித்த காலப்பகுதி அரச விடுமுறை தினமாக கருதப்படமாட்டாது. பொதுமக்களின் சேவையை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதே அரசாங்கத்தின் நோக்காகும். எனினும் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்த்து சுய தனிமைப்படுத்தலுக்கு வழி வகுக்கும் வகையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற் முன்னர் மார்ச் 20 ம் திகதி முதல் 27 ம் திகதி வரை வீட்டிலிருந்து பணிபுரியும் காலமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.