ஓய்வூதிய கொடுப்பனவுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ம் மற்றும் 3 ம் திகதிகளில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த இரு தினங்களிலும் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு ஏப்ரல் மாதம் 6 ம் திகதி ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்கவுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. தபால் அலுவலகங்கள் மற்றும் உரிய வங்கிகளின் ஊடாக ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
தபால் அலுவலகங்களின் ஊடாக ஓய்வூதியங்களை பெறுவோரின் வீடுகள் மற்றும் கிராம அலுவலகர் பிரிவுக்கு ஓய்வூதியம் கொண்டுவந்து ஒப்படைப்க்கப்படும். வங்கிகளின் ஊடாக ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்வோரின் பணம் உரிய வங்கி கணக்குகளுக்கு ஏப்ரல் 2 ம் மற்றும் 3 ம் தினங்களில் வரவிலிடப்படும். வங்கிகளுக்கு சென்று வருவதற்கென விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் வழங்கப்படவுள்ளன.
கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் ஓய்வுபெற்றோர் தாம் வசிக்கும் பகுதியிலுள்ள கிராம சேவகருக்கு ஏற்கனவே அறிவிக்க வேண்டும். அதற்கமைய அதிகாரிகள் அருகிலுள்ள வங்கிகளுக்கு அவர்களை அழைத்து செல்வர் முப்படையினர் மற்றும் பொலிசார் உரிய போக்குவரத்து வசதிகளை வழங்கவுள்ளனர்.
உரிய நகரங்களில் அனைத்து வங்கிகளினதும் ஒரு கிளையினையாவது குறித்த தினங்களில் திறந்து வைக்க அரசு மற்றும் தனியார் வங்கி அதிகாரிகள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகள் ஜனாதிபதி விசேட செயலணி கூட்டத்திலேயே குறித்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.