வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இன்று பிற்பகல் 2 மணி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும். இம்மாவட்டங்களுக்கான ஊரடங்கு இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டது.
புத்தளம் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பிறப்பிக்கப்படும் ஊரடங்கு எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட் கிழமை காலை 6 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்படும்.
கொழும்பு, கம்பஹா, களுததுறை மற்றும் யாழ் மாவட்டங்களில் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்குமென அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஏனைய மாவடடங்களில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 6 மணிக்கு நீக்கப்படும். ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் மக்களுக்கு தேவையான உணவு, பொருட்கள் உள்ளிட்ட ஏனைய அத்தியவசிய பொருட்களை வீட்டிலிருந்தவாறே கொள்வனவு செய்வதற்கான திட்டம் ஒன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறும். இதுவரை 4 ஆயிரத்து 18 பேர் ஊரடங்கு சட்டத்தை மீறியதற்காக கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
வவுனியா மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகர் பகுதிக்கு வந்தவண்ணமுள்ளனர்.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் வேளையில் ஒரு சிலர் வீதியின் இருமருங்கிலும் நின்றவாறு இருப்பதை அவதானிக்க முடிந்துள்ளது. ஒரு சிலர் வர்த்தக நிலையங்களை திறந்து வைத்திருந்தனர். ஊரடங்கு சட்டம் அமுலிலிருந்தாலும் நாடெங்கும் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அத்தியவசிய உணவு பொருட்கள், மரக்கறி மற்றும் மீன் போன்றவற்றிற்கு வழங்கிய அனுமதி தொடர்ந்தும் அமுலில் உள்ளது.விவசய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு எவ்வித தடையும் இன்றி விவசாயத்தை மேற்கொள்ளலாம்.
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள போது வீடுகளில் தங்கியிருந்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவை வழங்குமாறு பொலிஸார் மக்களை கேட்டுள்ளனர். இதேவேளை கட்டுநாயக்க, சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அவர்கள் தமது வீடு நோக்கி செல்வதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.