பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகிறது. காலை 8.30 மணிக்கு ஆரம்பமான வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் பணிகள் நண்பகல் 12.30 மணி வரை இடம்பெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஆட்சேபனை தெரிவிப்பதற்காக 12 மணிமுதல் பிற்பகல் 1.30 மணி வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வேட்புமனுவை கையளிக்கும்போது, ஆதரவாளர்களையோ, குடும்ப உறுப்பினர்களையோ அழைத்துவருவதை தவிர்க்குமாறும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடுவதற்கென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சுயட்சைக்குழுக்கள் நேற்றைய தினம் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தன.
நேற்று பிற்பகல் 4 மணி வரையான காலப்பகுதியில் 357 சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியிருந்தன. 82 அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன. 93 சுயாதீன குழுக்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்ததாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சகல மாவட்ட செயலக காரியாலய வளாகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு பணிகளில் 7 ஆயிரத்து 654 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். 133 வீதித் தடைகள் மற்றும் 77 நடமாடும் பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையை அடுத்து தேர்தல் இடம்பெறுவது தொடர்பில் இன்றைய வேட்புமனுத்தாக்கலின் பின்னர் தேர்தல் ஆணைக்குழுவின் பின்னர் கலந்துரையாடி இறுதி தீர்மானம் பெறப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.