அரசாங்க தகவல் திணைக்களத்தில் அதன் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ தலைமையில் இன்று நடைபெற்ற கொரோனா வைரஸ் (Covid -19) செய்தியாளர்களுடனான சந்திப்பில் விசேட வைத்தியர் ஜாசிங்க மேலும் தெரிவிக்கையில் இதுவரையில் புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளானதாக இருவர் மாத்திரமே அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களுள் நேற்று அடையாளம் காணப்பட்ட 44 வயதுடையவர் சுற்றுலாப்பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்டவர் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கு முன்னர் இத்தாலி சுற்றுலாப்பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்ட 52 வயதுடைய நபருடன் ஒரே அறையில் தங்கி இருந்தவர் என்றும் தெரிவித்தார். இவர்களுடன் தொடர்புபட்ட நெருங்கிய உறவினர் அடங்கலாக 8 பேர் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இந்த நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இதுவரையில் காணப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இவர்களுடன் நெருக்கமான தொடர்புகளைக்கொண்டிருந்த 65 பேர் தொடர்பில் தற்பொழுது தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார். 52 வயதுடைய முதலாவது நபர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் இரத்த அழுத்தத்தையும் கொண்டவர் என்றும் வைத்தியர் தெரிவித்தார். நாடு முழுவதிலும் உள்ள 17 கொரோனா வைத்தியசாலை சிகிச்சைப்பிரிவுகளில் 65 பேர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். மார்ச் 11 ஆம் திகதி வரையில் வெளிநாடுகளில் இருந்து வந்த 4794 பேர் தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் உள்வாங்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 3,035 பேர் இலங்கையர்கள், ஏனையோர் சீன நாட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச ரீதியில் கொரோனா நோய்த் தாக்கம் தற்பொழுது அதிகரித்து வருகின்றது. இத்தாலியில் நிலைமை மிக மோசமானதாக காணப்படுகின்றது. தென் கொரியாவில் இந்த நோய் அதிகரிப்பு சற்று குறைவடைந்துள்ளது. இருந்த போதிலும் அங்கு முழுமையாக குறைவடையவில்லை. இத்தாலியைப் பொறுத்தவரையில் அங்கே இந்த நோயின் தாக்கம் அதிகம் காணப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாகவே வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோர் தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றும் அவர் கூறினார். சீனாவில் இந்த நோய்த் தாக்கம் குறைவடைந்த போதிலும் நோய் பரவ ஆரம்பித்த வூஹான் மாநிலத்தில் இருந்து எவரும் வெளிநாடு செல்வதற்கு அந் நாட்டு அரசாங்கத்தினால் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் அவர் மேலும் தெரிவித்தார்.