கொரோனா வைரஸ் ஒரு தீவிர தொற்றுநோய் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் சீனாவுக்கு வெளியே உள்ள நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டொக்டர் டெட்ரோஸ் அடனோம் கெப்ரியசுஸ் தெரிவித்துள்ளார்.
தீவிர தொற்றுநோய் என்பது ஒரே நேரத்தில் உலகெங்கிலும் பல நாடுகளில் பரவி வரும் ஒரு நோயாகும். வைரஸ் குறித்த எச்சரிக்கையற்ற செயற்பாடுகளினால் நோய் தீவிர நிலையை எட்டியுள்ளது. இதனால் அவசர மற்றும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வைரஸ் பரவலை கட்டுப்படுத்துமாறு அவர் அரசாங்கங்களுக்கு அறிவித்துள்ளார். கொரோனா வைரஸை அடக்கிக் கட்டுப்படுத்த முடியும் என்பதை பல நாடுகள் நிரூபித்துள்ளன. அமைதியான முறையில் சரியான விடயங்களைச் செய்வதற்கும், உலக மக்களைப் பாதுகாப்பதற்கும் ஒன்றிணைந்துள்ளதாகவும், இதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமெனவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டொக்டர் டெட்ரோஸ் அடனோம் கெப்ரியசுஸ் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் இடம்பெற்ற சுகாதார ஆலோசனை கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக எதிர்வரும் வாரங்களில் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கக்கூடுமெனவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.