முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை கைதுசெய்வதற்கு பிடியாணை பிறப்பிப்பது குறித்து, சட்டமா அதிபர் எடுத்துள்ள தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி, ரவி கருணாநாயக்க, இன்றுமுற்பகல் ரீட் மனுவொன்றை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். சட்டமா அதிபர் எடுத்துள்ள தீர்மானத்தை இடைநிறுத்தும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு ரவி கருணாநாயக்க இந்த ரீட் மனுவின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி சம்பவம் தொடர்பில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, பேர்பெச்சுவல் ட்ரசரிஸ் கம்பனியின் உரிமையாளரான அர்ஜூன் எலோசியஸ் , அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி. கசுன் பலிசேன உள்ளிட்ட 10 சந்தேக நபர்களை இதுவரை கைது செய்யமுடியாதுள்ளது.
அவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கோட்டை மஜிஸ்திரேட் ரங்க திசாநாயக்க கடந்த 6 ஆம் திகதி பிடியாணை பிறப்பித்தார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் பல சந்தர்ப்பங்களில் ரவி கருணாநாயக்கவின் வீட்டுக்கு சென்ற போதிலும் அவர்அங்கு இல்லாமையினால் கைத செய்ய முடியாது போய்விட்டது. பிடியாணை பிறப்பிக்கப்பட்டு ஒரு சில நாட்கள் சென்ற போதிலும் இதுவரை அப் 10 பேரில் ஒருவரை மாத்திரமே கைது செய்ய முடிந்துள்ளது. பேர்பெச்சுவர் ட்ரெசரிஸ் கம்பனியின்பணிப்பாளர்களுள் ஒருவரான முத்துராஜா சுரேந்தி என்ற இவர் எதிர்வரும் 18 அம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பேர்பெச்சுவல் ட்ரெசரிஸ் கம்பனியின் பணிப்பாளர்களான ஜெப்ரி ஜோசப் எலோசியஸ், சித்ரரஞ்சன், ஹூலுகல்ல, அஜான் கார்தின புஞ்சிஹேவா, மத்திய வங்கியின் உயர் அதிகாரியொருவரான சங்கரப்பிள்ளை பத்மநாதன், ஊழியர் சேமலாப நிதியத்தின் அதிகாரியொருவரான இந்திக சமன்குமார ஆகியோருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.