கட்டுநாயக்க விமான நிலையத்தின் புதிய விமான தரிப்பு கட்டமைப்பின் நிர்மாண பணிகளை எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் நிறைவுசெய்யாவிடின், குறித்த கட்டுமாண நிறுவனத்தை தடைப்பட்டியலில் சேர்க்கவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். நிர்மாண பணிகளை மே மாதம் 31ம் திகதிக்கு முன்னர் கட்டாயம் நிறைவுசெய்ய வேண்டுமெனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். விமான நிலையத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் கண்டறிவது தொடர்பான விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் பிரதான அம்சமாக புதிய விமான தரிப்பிடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கென 6 பில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளது. நிர்மாண பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பு ஜப்பான் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டது.
கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2019 ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் இதன் நிர்மாண பணிகள் நிறைவுசெய்யப்படவேண்டுமென அறிவிக்கப்பட்டது. பின்னர் நான்கு சந்தர்ப்பங்களில் நிர்மாண பணிகளுக்கான கால எல்லை நீடிக்கப்பட்டது. இக்கால எல்லையும் கடந்த பெப்ரவரி மாதம் 28ம் திகதியுடன் நிறைவடைந்தது. எனினும் நிர்மாண பணிகளில் 75 வீதமே பூர்த்தியடைந்துள்ளது. இதன் காரணமாக விமான நிலையத்திற்கு பாரிய நட்டம் ஏற்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனை அடிப்படையாக வைத்தே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறித்த ஜப்பான் நிறுவனத்துக்கு நிர்மாண பணிகளை விரைவில் நிறைவுசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.